search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருப்பன் யானையை பிடிக்க விடிய விடிய காத்திருந்த கும்கிகள்
    X

    கருப்பன் யானையை பிடிக்க விடிய விடிய காத்திருந்த கும்கிகள்

    • அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கருப்பன் யானை அட்டகாசம் செய்து வருகிறது.

    இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் யானை, காலிபிளவர், முட்டைகோஸ், மக்காச்சோளம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பின்னர் அதிகாலை நேரமானதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    எனவே அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ், கலீம், அரிசி ராஜா ஆகிய 3 கும்கிகளை கொண்டு வந்தனர். அந்த கும்கிகள் ஜோரை காடு ரங்கசாமிகோவில் அருகில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 3 கும்கிகள் மற்றும் 4 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனத்துறையினர் கொண்ட குழுவினர் கருப்பன் யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்காக வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் உஷாரான கருப்பன் யானை இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனவே இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்கே சென்று கருப்பன் யானையை தேட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். பின்னர் கும்கிகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×