search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடரும் சம்பவம்: வருவாய் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் திருட்டு
    X

    வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.

    தொடரும் சம்பவம்: வருவாய் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் திருட்டு

    • வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
    • பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர்-ராசிபுரம் பிரதான சாலை புது ஹவுசிங் போர்டு குறிச்சி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஆத்தூர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர் சீலியம்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் சென்னையில் வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் சென்னையில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நாகராஜ், அவரது மனைவி புஷ்பா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் இன்று காலை ஆத்தூரில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும் வீட்டில் வேறு ஏதாவது திருட்டு போனதா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.

    ஆத்தூரில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று முன்தினம் வெங்காய வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு போனது. நேற்று ஆத்தூர் பழைய ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் திருட்டு போனது. இந்த நிலையில் இன்று வருவாய் ஆய்வாளர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.

    ஆத்தூர் பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×