என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை
- புரபஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஐதராபாத்திலும் இயங்கி வருகின்றன.
- புரபஷனல் கூரியர் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை:
புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்படாத கூடுதல் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
புரபஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஐதராபாத்திலும் இயங்கி வருகின்றன.
இங்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஒரே நேரத்திற்குள் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினார்கள்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை பிராட்வேயில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் வந்தனர். அவர்கள் அலுவலகத்திற்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த புரபஷனல் கூரியர் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதே போல் காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு பட்டு ஜவுளிக்கடையிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.






