search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயர்லாந்து நாட்டு பெண் மர்ம மரணம்- உடலை தோண்டி எடுக்க அதிகாரிகள் முடிவு
    X

    அயர்லாந்து நாட்டு பெண் மர்ம மரணம்- உடலை தோண்டி எடுக்க அதிகாரிகள் முடிவு

    • கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தூர் அடுத்த நெடுங்காவடி கிராமத்தில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கி பண்ணை வீடு கட்டி அதில் வசித்து வந்தார்.

    பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    அப்போது அந்த வீட்டை ஏற்கனவே திருவண்ணாமலையில் தங்கியிருந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளனர். அந்த பெண் தனிமையில் பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

    பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் அந்த மூதாட்டியை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என செல்லமாக பெயர் சூட்டி அழைத்து வந்தனர்.

    மீனாட்சியம்மாவுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனாட்சியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

    நேற்று ஹரி இறந்த அயர்லாந்து பெண் மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.

    மனு மீது விசாரணை செய்த கிராம நிர்வாக அலுவலர், இறந்த பெண் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் சந்தேகமடைந்து இதுகுறித்து சாத்தனூர் அணை போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி தாசில்தார் அப்துல்ரகூப், மண்டல துணை தாசில்தார் மோகனராமன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    புதைக்கப்பட்ட அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் வந்ததும் அவரிடம் புகார் பெற்று அதன் பின்னர், இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்.

    அதன் பின்னரே, அவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா அல்லது பணத்திற்காக அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×