search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி
    X

    இடிந்து கிடக்கும் வீடு

    வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி

    • நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அரியமங்கலம், கீழ அம்பிகாபுரம், காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவர். இவர் தனது தாய் சாந்தி (வயது 70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாரிமுத்து தங்கையின் கணவர் சென்னையில் இறந்து விட்டார். இதனால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டார். வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, குழந்தைகள் பிரதீபா, ஹரிணி ஆகியோர் இருந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் வழக்கம்போல வீட்டில் தூங்கினர். நள்ளிரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    உடனடியாக கீழே வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடந்ததும் இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருப்பதும் தெரியவந்தது அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 4 பேர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    புத்தாண்டு பிறந்து உலகமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×