என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அறநிலையத்துறை இணை ஆணையர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை
    X

    அறநிலையத்துறை இணை ஆணையர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை

    • சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது.
    • இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த முத்து கணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் ஒரே சமூகத்திற்கு சார்ந்ததாக இருந்து வருகிறது.

    இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கோவிலில் இந்து அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த பணிகளோ அல்லது நன் கொடைகளோ வசூலிக்க அதிகாரம் இல்லை. இந்தக் கோவிலில் தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கண்காணிப்பில் அய்யனார் என்பவர் கோவில் ஆய்வாளராக இருந்து வருகிறார்.

    இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் "திருப்பணி" வேலைகளை கோவில் ஆய்வாளர் அய்யனார் செய்து வருகிறார். இது விதிகளுக்கு எதிரானது.

    கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடர்ந்து பணி நடைபெறுகிறது. எனவே கோவிலில் எந்த பணியும் நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் கோவில் உள்ளே திருப்பணி வேலைகள் செய்து வருவதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி, திருப்பணி குறித்து இடைக்கால தடை விதித்திருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவை மீறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் எவ்வாறு திருப்பணி வேலை செய்கிறார்.

    இந்நிலை தொடர்ந்தால் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கோவில் ஆய்வாளர் அய்யனார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி கோவிலில் எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தார்.

    Next Story
    ×