search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்
    X

    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்

    • சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

    மதுரை:

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் மூலமாக நான் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2013 முதல் 2021-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் உள்ளது.

    சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும், அவற்றைப் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

    இந்நிலையில், இடைக்காலத் தடையை நீக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

    அரசு தரப்பில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையானது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதனையடுத்து அத்வானி மற்றும் உச்சநீதிமன்ற பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். விசாரணைக்காக அழைத்து மனுதாரர் மீது குற்றம் சாட்டுவது எப்படி? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.

    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    Next Story
    ×