search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாஞ்சோலை பகுதியில் சாரல் மழை: பாபநாசம் அணையில் 23.87 சதவீதம் நீர் இருப்பு
    X

    மாஞ்சோலை பகுதியில் சாரல் மழை: பாபநாசம் அணையில் 23.87 சதவீதம் நீர் இருப்பு

    • அணைகளில் இருந்து வினாடிக்கு 738 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • 3 நாட்களுக்கு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சற்று பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு ஓரளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த போதிலும், மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு பகுதியில் தலா 7 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளுக்கு வினாடிக்கு 494 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 738 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்றைய நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட அணையான பாபநாசத்தில் 62.30 அடி நீர் இருப்பு உள்ளது. இது 23.87 சதவீதம் ஆகும். சேர்வலாறு அணையில் 19.63 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டது. அங்கு ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குளு குளு சீசன் நிலவி வந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றால பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.

    இன்று காலை குற்றாலம் அருவிகளில் சாரல் மழையின் எதிரொலியாக சீராக தண்ணீர் விழுந்து வருகிறது. அதில் குறைந்த அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்.

    Next Story
    ×