search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை மாவட்டத்தில் பலத்த மழை- பொள்ளாச்சி குரங்கு நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு
    X

    குரங்கு நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி


    கோவை மாவட்டத்தில் பலத்த மழை- பொள்ளாச்சி குரங்கு நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

    • தமிழக-கேரள எல்லையையொட்டிய கேரள பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, சார்ப்பா நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கவியருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.

    இந்த மழையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதிது புதிதாக நீர்வீழ்ச்சிகளும் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழைக்கு அண்ணாநகர் பகுதியில் கனகராஜ் என்பவரின் வீடு அருகே மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்தது.

    தொடர் சோலையார் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதுதவிர தமிழக-கேரள எல்லையையொட்டிய கேரள பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, சார்ப்பா நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் புகைப்படம் பிடித்து மகிழ்ந்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. அணைக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது. இந்த அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கவியருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதேபோல் நெகமம் கிணத்துக்கடவு, வடசித்தூர், காட்டாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    கோவை மாநகர் பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து மதியத்திற்கு பிறகு காந்திபுரம், பீளமேடு, ரெயில் நிலையம், வடவள்ளி, கணபதி, துடியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளிலும், சாலை ஓரத்திலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    மதியத்தில் இருந்து இரவு வரை மழை நீடித்ததால் பள்ளி சென்ற மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மழையில் நனைந்தபடியே தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். சில பெற்றோர் குடைகளை எடுத்து வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்றனர். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்களும் மழையில் நனைந்தபடியே பயணித்தனர்.

    கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்கோனாவில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்கோனா-102, சின்னகல்லார்-87, வால்பாறை பி.ஏ.பி-69, வால்பாறை தாலுகா-68, சோலையார்-45, ஆழியார்-30.


    Next Story
    ×