search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை எச்சரிக்கை- நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படும் 283 பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
    X

    கனமழை எச்சரிக்கை- நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படும் 283 பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    • நீலகிரி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
    • அரக்கோணத்தில் இருந்து 43 பேர் அடங்கிய தேசியபேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அங்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் அடுத்த ஓவேலி சூண்டி ரோட்டில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 283 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    அடுத்தபடியாக வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, மருத்துவம், போலீசார், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, சுகாதாரம், குடிமைப்பொருள் வழங்கல் ஆகிய துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து தாலுகாக்களிலும் பேரிடர் மீட்பில் பயிற்சி பெற்ற 3500 முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர்கால நண்பர்கள் ஆகியோர் தயாராக உள்ளனர்.

    எனவே அரக்கோணத்தில் இருந்து 43 பேர் அடங்கிய தேசியபேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஊட்டி, கூடலூர் கோட்டத்தில் முகாமிட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புக்குழுவுடன் இணைந்து செயல்பட தயார்நிலையில் உள்ளது. இதுதவிர பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    அதேபோல ஊட்டி: 0423-2445577, குன்னூர்: 0423-2206002, கூடலூர்: 04262-261295 ஆகிய கோட்டங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டர் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி பிரவீண் பிரசாத், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் காயத்ரி, ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதேபோல கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலும் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை-சோலையாறு ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அந்த பகுதியை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வால்பாறையில் நேற்று காலை நிலவரப்படி 37 மி.மீ, மேல் நீராற்றில் 39 மி.மீ, சோலையாறு அணையில் 22 மி.மீ. மழை பெய்து உள்ளது. இதனால் சோலையாறு அணையில் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 252 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    Next Story
    ×