search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை
    X

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை

    • ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    அதே போல தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்கிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    ஒரு சில நேரங்களில் கனமழையும் கொட்டியது. நேற்றிரவு ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சிறிது நேரமே அந்த மழை நீடித்தது. ஆனால் நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. காற்று, இடி-மின்னல் எதுவும் இல்லாமல் வெளுத்து வாங்கியது.

    சென்னையை ஒட்டிய மாவட்டங்களிலும் ஆர்ப்பரிப்பு இல்லாமல் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆனால் பெரும்பாலான இடங்களில் உடனே வடிந்துவிட்டது.

    இந்நிலையில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். நாளை (22-ந் தேதி) மற்றும் 23-ந் தேதியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று முதல் 24-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கடந்த வாரம் வரை 13 சதவீதம் குறைவாக பதிவாகி இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பற்றாக்குறை குறைந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 6செ.மீ., எண்ணூர் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×