search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: பல இடங்களில் மண்சரிவு-மரங்கள் முறிந்து விழுந்தன
    X

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: பல இடங்களில் மண்சரிவு-மரங்கள் முறிந்து விழுந்தன

    • மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
    • கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு தாமதமாகவே தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் மின்சார வினியோகத்திலும் தடை ஏற்பட்டது.

    குன்னூர் கண்டோன்மென்ட் வாரியத்திற்குட்பட்ட பாய்ஸ் கம்பெனி லோயர் குரூஸ்பெட் என்ற இடத்தில் மழையால் ஆபி என்பவரின் வீட்டு தடுப்பு சுவர் இடிந்து, கீழே உள்ள ஜான்சன் என்பவரின் வீட்டில் மேல் விழுந்ததில் மேற்கூரை சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஊட்டியில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்பு படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டியில் இருந்து கிளைன்மார்கன் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

    கூடலூர்-ஊட்டி சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் அருகே பெரிய கற்களுடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டது.

    மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மண் குவியல்களை அகற்றினர்.

    1 அரைமணி நேரத்திற்கு பிறகு மண் குவியல்கள், கற்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட காப்பூர் மூலாவில் இருந்து கங்கமூலா செல்லும் சாலையில் மச்சிகரை என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ராஜன் என்பவரது வீடு இடிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 7 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளன.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் மின்கம்பமும் சரிந்து விழும் நிலயில் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய துறையினர் அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது.

    மழையுடன் கடும் மேக மூட்டமும் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி சாலை, ஊட்டி-கூடலூர் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவருமே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 171 அடி கொண்ட அவலாஞ்சி அணைக்கு வினாடிக்கு சராசரியாக, 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    மேலும், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர்பவானி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் இருவாரங்களில், மாவட்டத்தில் உள்ள, 13 அணைகளில் மின் உற்பத்திக்கு தேவையான அளவுக்கு நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×