search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விநாயகர் சிலைகளை அலங்கார தோரணங்களுடன் கரைக்க கூடாது- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
    X

    விநாயகர் சிலைகளை அலங்கார தோரணங்களுடன் கரைக்க கூடாது- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    • களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
    • வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையை மூழ்க வைத்து கரைக்கலாம்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

    * சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடங்களில் கரைக்க வேண்டும்.

    * சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூ மாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும்.

    மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிவகைகள் இருப்பின், அதனை அனாதை இல்லங்களுக்கு மறு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மேலும், மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின் அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம்.

    * சிலைகளில் இருந்து அகற்றப்பட்ட துணிகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

    * வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையை மூழ்க வைத்து கரைக்கலாம். தெளிந்த நீரை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றை உலர வைத்து தோட்டத்தில் மண்ணாக பயன்படுத்தலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பாதுகாப்பாக கரைத்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×