search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிசி-மளிகை பொருட்களின் விலை உயர்வு: துவரம் பருப்பு விலை தாறுமாறாக அதிகரிப்பு
    X

    அரிசி-மளிகை பொருட்களின் விலை உயர்வு: துவரம் பருப்பு விலை தாறுமாறாக அதிகரிப்பு

    • மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
    • துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது.

    சென்னை:

    மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பாண்டியராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    குறிப்பாக துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.90 அளவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மகாராஷ்டிரத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

    அதேபோல மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×