என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தேடுதல் குழுவை அரசு அறிவிக்க வேண்டும்- கவர்னர் வலியுறுத்தல்
- பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் இல்லாமல் உள்ளனர்.
- சிண்டிகேட், செனட் மற்றும் நிர்வாக குழு கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.
இதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆட்சி மன்ற, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி நிலை குறைந்து வருவதாகவும், இதை சரி செய்ய காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை கொண்டு வர வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
மேலும் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களை தாமதமின்றி பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக உறுப்பினர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஆட்சி மன்ற, நிர்வாக குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும்.
இந்த குழுக்களின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் பகிர வேண்டும்.
பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் இல்லாமல் உள்ளனர். அந்த பணியிடங்களுக்கு தற்காலிக பொறுப்பாளர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழக சட்டங்களின்படி பணியிடங்களை துரிதமாக நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதால் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் தேர்வு என்பது யு.ஜி.சி. விதிமுறைகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காலத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் கால தாமதமின்றி நிறைவேற யு.ஜி.சி. விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங் கள் அதிக அளவில் காலியாக உள்ளது. இதை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்ய ஆட்சேர்ப்பு செயல்முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.
சிண்டிகேட், செனட் மற்றும் நிர்வாக குழு கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். இவற்றில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறார்கள்.
ஆனாலும் இந்த கூட்டங்கள் அடிக்கடி நடைபெறுவதில்லை. நிர்வாக அமைப்பு கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு பதிலாக தலைமை செயலகத்தில் நடத்தப்படுகின்றன.
சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதால் அவற்றின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
துணைவேந்தர்கள் தேர்வு செயல்முறை யு.ஜி.சி. விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். இந்த நியமனத்துக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன் அதற்கான தேடுதல் குழுவை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






