search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 44,781 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 44,781 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி

    • இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்று பேசினார்.

    விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் அகிலா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். முனைவர் பட்டம் ஆய்வை நிறைவு செய்த 153 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வில் நிறைஞர் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களை விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    இதில் பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 31 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    மேலும் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 42 ஆயிரத்து 915 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 978 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் படித்த 631 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் தங்கவேல் உள்பட பலர் செய்திருந்தனர்.

    தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

    விழாவில் பங்கேற்ற மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பா.ம.க.வை சேர்ந்த சதாசிவம் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எந்த எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காததால் தானும் புறக்கணித்ததாக கூறினார்.

    Next Story
    ×