search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமஜெயம் கொலைக்கு முந்தைய நாள் தில்லைநகரில் ஒன்று கூடிய 5 ரவுடிகள்
    X

    ராமஜெயம் கொலைக்கு முந்தைய நாள் தில்லைநகரில் ஒன்று கூடிய 5 ரவுடிகள்

    • ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
    • 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி அதிகாலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்றார்.

    அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    அது மட்டும் அல்லாமல் கொலை நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு காரைக்காலில் அவர்கள் சந்தித்து பேசிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

    இந்த நபர்களுக்கு ஜாபர் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புள்ளது. எனவேதான் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். மேலும் இந்த 5 பேருடன் மற்ற 8 பேருக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் 13 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கண்டிப்பாக துப்பு துலங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    இந்த 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகவே வேறு வகையில் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) மருத்துவ அறிக்கையுடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிபதி உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து தீர்ப்பு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×