என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாலையில் ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டி
உறவினர்கள் கைவிட்டதால் ஆதரவின்றி தெருவில் தவிக்கும் மூதாட்டி
- கணவர் இறந்து விட்டதால், மகன் கந்தசாமி பராமரிப்பில் இசக்கியம்மாள் இருந்து வந்துள்ளார்.
- லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கி உள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 80). இவர் களக்காடு மூணாற்று பிரிவில் உள்ள சுடுகாட்டில் நேற்று நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் விசாரித்தபோது உறவினர்களே அவரை சுடுகாட்டில் விட்டுச்சென்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர்.
விசாரணையில், கணவர் இறந்து விட்டதால், மகன் கந்தசாமி பராமரிப்பில் இசக்கியம்மாள் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் உயிரிழந்ததால், கந்தசாமியின் 2 மனைவிகளும் மூதாட்டி இசக்கியம்மாளை பராமரித்து வந்துள்ளனர். இசக்கியம்மாளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நாளடைவில் வயது முதிர்வின் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் பராமரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி சுடுகாட்டில் விட்டு சென்று விட்டனர். அவர் பயன்படுத்திய சேலைகளையும், மூட்டையாக கட்டி அருகில் போட்டு விட்டு சென்று விட்டனர். அவர் உணவுக்கு வழியின்றி தவித்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவருக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வாங்கி கொடுத்தனர்.
இதற்கிடையே லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கவும் செய்துள்ளனர். இதனால் அவருக்கு தலையில் வலி இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின் போலீசார் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் எச்சரித்து, அவரை ஒப்படைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் மூதாட்டியை ஏற்கவும், பராமரிக்கவும் மறுத்து விட்டனர்.
இதனால் மூதாட்டி தெருவில் ஆதரவின்றி தவித்து வருவது தெரிய வந்தது. மூதாட்டி இசக்கியம்மாளில் மோதிரத்தையும், அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் சிலர் ஏமாற்றி பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஏற்க மறுத்ததால் தொடர்ந்து மூதாட்டி தெருவில் வசித்து வருகிறார். எனவே இவரை காப்பகத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






