என் மலர்
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 3-வது நாளாக ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

- நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
- 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொடர்பாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததாரருமான முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.
இதில் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் பகுதியில் சண்முகம் என்பவரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவராயன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது. ராமச்சந்திரனின் அலுவலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்றவர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.
இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவல்களையும் அமலாக்கத்து றை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.