என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது
    X

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது

    • வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 5 மணி அளவில் 9 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
    • திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 5 ஆயிரத்து 779 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 5 மணி அளவில் 9 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இந்த தண்ணீர் நேராக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 342 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 10 ஆயிரத்து 99 கன அடியாக சரிந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப தண்ணீர் குறைத்தும், அதிகரித்தும் திறந்து விடப்படுகிறது.

    அதன்படி ஜூலை மாதம் முதல் வாரம் முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதையடுத்து 26-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீர் திறப்பானது நேற்று மாலை முதல் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 65.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 65.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 28.79 டி.எம்.சி.யாக உள்ளது.

    Next Story
    ×