search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிலிண்டர் விலை குறைப்பு- பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
    X

    சிலிண்டர் விலை குறைப்பு- பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

    • மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார்.
    • நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.

    டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

    இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்ததுடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.

    இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×