search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் 11 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவிலை பூட்டை உடைத்து திறந்த அதிகாரிகள்

    • கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசனேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அந்த கோவில் கடந்த 2012-ம் ஆண்டு பூட்டப்பட்டது. பூட்டப்பட்ட அந்த கோவிலை திறக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. பலமுறை சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோவில் நிரந்தரமாக பூட்டப்பட்டது.

    கடந்த 11 ஆண்டுகளாக அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் பூட்டியே கிடந்தது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வெளியில் நின்றே சாமியை கும்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கோவிலை திறக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 11 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோவிலை திறக்க கடந்த ஒரு வார காலமாக இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

    இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையிலான வருவாய் துறையினர் இன்று காலை கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். பின்பு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது.

    இதில் கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரையம்மாள், அங்கயற்கண்ணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் (ஆலய நிலங்கள்) முருகையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கோவிலை திறக்க ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டனர்.

    கோவிலை திறக்க மற்றொரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு திருமங்கலம் துணை சூப்பிரண்டு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×