search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் தொடர் மழை: கிளியூர் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
    X

    கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வெள்ளி போல் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்

    ஏற்காட்டில் தொடர் மழை: கிளியூர் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    • படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    • தென்மேற்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.

    இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏரி, பூங்கா என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.

    தென்மேற்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷண நிலை மிகவும் குளுமையாக மாறியுள்ளது.

    மேலும் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் இங்குள்ள கிணறு, கால்வாய், ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்ப தொடங்கி உள்ளது.

    குறிப்பாக கடந்த 8 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சி இந்த மழை பொழிவினால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஏற்காடு ஏரியில் இருந்து 2.5 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு உற்சாகமாக நீராடி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4.45 மணியளவில் தொடங்கிய மழை 45 நிமிடங்கள் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவியது. இன்று காலை ஏற்காட்டில் வெயில் அடித்தபடி இருந்தது. சனிக்கிழயைான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம், ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 11.20 மி.மீ. மழை பெய்துள்ளது. கரியகோவில் 7, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, எடப்பாடி 2, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 30.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×