search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடுக்கடலில் தத்தளித்த காசிமேடு மீனவர்கள் 9 பேரை மீட்ட கடலோர காவல் படையினர்
    X

    நடுக்கடலில் தத்தளித்த காசிமேடு மீனவர்கள் 9 பேரை மீட்ட கடலோர காவல் படையினர்

    • கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது.
    • கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் வேலு உள்பட 9 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதனை சரிபார்க்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீனவர்கள் 9 பேரும் கரைதிரும்ப முடியாமல் படகில் தத்தளித்தனர்.

    மேலும் காற்றின் திசைக்கு ஏற்ப விசைப்படகு நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்களிடம் இருந்த வயர்லெஸ் மூலம் அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மற்ற தமிழக விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை இயக்குனர் பழனிசாமி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து 240 கடல் மைல் தூரத்தில் பழுதான படகில் மீனவர்கள் தத்தளிப்பதை அந்தபகுதி வழியாக வந்த சரக்கு கப்பலில் இருந்த ஊழியர்கள் கண்டு பிடித்தனர். அவர்கள் மீனவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை கொடுத்து உதவினர். இதுபற்றி சரக்கு கப்பல் அதிகாரிகள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோரகாவல் படையினர் ரோந்து படகில் விரைந்து சென்று பழுதான விசைப்படகில் இருந்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் விசைப்படகை தங்களது படகில் கயிறு மூலம்கட்டி இழுத்தபடி நேற்று இரவு அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு காசிமேடு மீனவர்கள் 9 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசைப்படகை சரிசெய்து மீனவர்கள் விரைவில் காசிமேடு திரும்ப உள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    Next Story
    ×