search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இதழியல் பணிக்கு சி.பா.ஆதித்தனாரே வேர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இதழியல் பணிக்கு சி.பா.ஆதித்தனாரே வேர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

    • உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் சி.பா.ஆதித்தனார்.
    • உலகமெங்கும் பரவலாக உள்ள கோடான கோடி தமிழ் மக்களுக்கு பத்திரிகை படிப்பதற்கு ஆர்வத்தை ஊட்டியவரான சி.பா.ஆதித்தனாரை உலகம் இருக்கின்ற வரையில் யாரும் மறக்க இயலாது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர். பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழுக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி, தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியும் தினத்தந்தி நிறுவனருமான 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனாரும், நானும் தமிழ்நாடு மேலவையில் 1964-67ல் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.

    1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்திற்காக போராடியவர் சி.பா.ஆதித்தனார். இதற்காக அவரை எம்.பக்தவச்சலத்தின் ஆட்சியில் 9.10.1965 அன்று கைது செய்தார். இந்த தவறான, மன்னிக்க முடியாத செயலால் தான் 1967-ல் நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

    உலகமெங்கும் பரவலாக உள்ள கோடான கோடி தமிழ் மக்களுக்கு பத்திரிகை படிப்பதற்கு ஆர்வத்தை ஊட்டியவரான சி.பா.ஆதித்தனாரை உலகம் இருக்கின்ற வரையில் யாரும் மறக்க இயலாது.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை கொண்டாடுவது நாம் தமிழை போற்றுவதற்கு சமமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×