என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் தீப்பற்றி எரிந்தது- கண்ணாடிகளை உடைத்து 40 பேரை காப்பாற்றிய டிரைவர்
    X

    தீப்பிடித்து எரிந்த பஸ்.

    திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் தீப்பற்றி எரிந்தது- கண்ணாடிகளை உடைத்து 40 பேரை காப்பாற்றிய டிரைவர்

    • பஸ் முழுமையாக தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
    • போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து பஸ்சில் பரவிய தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக தீயில் எரிந்து எலும்புக்கூடானது.

    வந்தவாசி:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மகன் வெங்கடேசனுக்கு அச்சரப்பாக்கத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.

    நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து வந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் மீண்டும் திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பஸ்சில் காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். அச்சரப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வழியாக பஸ் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தவாசியை கடந்தபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்சில் இருந்து தீயில் கருகிய வாசத்தை பஸ்சின் டிரைவர் உணர்ந்தார்.

    ஆனாலும், இது வேறு ஏதாவது வாசமாக இருக்கலாம் என்று கருதி பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இரவு சுமார் 10 மணியளவில் வந்தவாசி அடுத்த மேல்மா என்ற இடத்தை கடந்தபோது பஸ்சின் வலதுபுற டயர் திடீரென வெடித்தது.

    இதில் தறிகெட்டு ஓடிய பஸ் பாலத்தில் மோதியது. டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பஸ்சில் இருந்து இறங்க முண்டியடித்து வந்தனர்.

    அவர்களால் இறங்க முடியவில்லை. பஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்டதாகவும், மூடப்பட்ட கண்ணாடிகளை கொண்டதாகவும் இருந்ததால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

    அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் இதை பார்த்து உடனடியாக லாரியை நிறுத்தினார். தான் கொண்டு வந்த இரும்பு ராடால் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியேற வழி ஏற்படுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் வேகவேகமாக இறங்கினர்.

    அப்போது பஸ் முழுமையாக தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து பஸ்சில் பரவிய தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக தீயில் எரிந்து எலும்புக்கூடானது.

    இந்த சம்பவம் குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×