என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மர்ம போன் வந்தது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ்நிலையம் அருகே ரெயில் நிலையம் உள்ளது. தற்போது 2-வது சீசன் தொடங்கிய உள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்தநிலையில் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் ஊட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்படும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஊட்டி ரெயில் நிலையத்தில் உள்ளூர் போலீசாரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர். ஆனால் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து பேசினார் என சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பேசியது தெரிய வந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக வெடிகுண்டு மிரட்டல் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






