search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணை இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
    X
    பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வெளியேறும் காட்சி.

    பவானிசாகர் அணை இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது.
    • பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    104.50 அடிக்கு மேல் சென்றால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு அப்படியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை நேற்று இரவு கடந்தது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பவானிசாகர் அணை வரலாற்றில் 28-வது முறையாக 104 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் 5-வது முறையாக பவானிசாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,549 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு உபரிநீராக 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பவானி ஆற்றல் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×