search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 5,100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    X
    102 அடியை எட்டிய நிலையில் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 5,100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

    • கடந்த சில நாட்களாக மீண்டும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • பவானி ஆற்றுக்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்த 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றுக்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,100 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அப்படியே 5, 100 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானி சாகர், தொட்டம்பாளையம் , நடுப்பாளையம், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், சதுமுகை, பவானிசாகர் கூடுத்துறை வரை உள்ள ஆற்று கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் நீர் அதிக அளவில் திறக்கக்கூடும். இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் வருவாய் துறையினர் உஷார்படுத்தப்பட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×