search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை- சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது
    X

    ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை- சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது

    • ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
    • இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை முதல் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி தரப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்ப்படாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூசும் பணி இன்று காலை தொடங்கியது.

    இதனால் இன்று காலை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியாக அரசு பேருந்துகள், கார்கள் சென்று வருகிறது. குப்பனூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை ஒட்டி மலை பாதை முழுவதும் சாலை சீரமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×