search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தோல் கழலை நோய் தாக்குதல்- அண்டை மாநிலங்களில் இருந்து மாடு கொண்டு வர தடை
    X

    தோல் கழலை நோய் தாக்குதல்- அண்டை மாநிலங்களில் இருந்து மாடு கொண்டு வர தடை

    • தமிழ்நாட்டில் தோல் கழலை நோயின் தாக்கம் பெருமளவில் இல்லை.
    • நோயால் பாதிக்கப்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளித்தும், இயற்கை மருத்துவ முறைகளை கடைப்பிடித்தும் குணப்படுத்த முடியும்.

    சென்னை:

    வட மாநிலங்களில் பசு மற்றும் எருமை மாட்டு இனங்களை தோல் கழலை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தமிழ்நாட்டில் மாடுகளை தாக்காமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த நோய் ஈ, கொசு, உண்ணி போன்ற பூச்சிகள் மூலம் பரவுவதால் அதனை கட்டுப்படுத்தவும், கிருமிநாசினிகளை உரிய முறையில் பயன்படுத்தி மாட்டு கொட்டகைகள், சுற்றுப்புறத்தை சுகாதார முறையில் பராமரிக்கவும் கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் பெருமளவில் இல்லை. இந்த நோயை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு கால்நடைத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்டை மாநிலங்களில் இருந்து பசு மற்றும் எருமை மாடுகள் தமிழகத்துக்கு கொண்டு வருவதை தடுக்க மாநில எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

    இந்த நோயால் பாதிக்கப்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளித்தும், இயற்கை மருத்துவ முறைகளை கடைப்பிடித்தும் குணப்படுத்த முடியும். இயற்கை சிகிச்சை முறையில் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம், மஞ்சள் அளவாக கலந்து வாய்வழியாக கொடுத்து வந்தால் மாடுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

    மேலும் வெற்றிலை-10 எண்ணிக்கை, மிளகு-10 கிராம், உப்பு-10 கிராம், வெல்லம் தேவையான அளவு அரைத்து கலந்து சிறிது சிறிதாக நாக்கில் தடவிக் கொடுப்பதன் மூலம் மாடுகள் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது. இது போன்ற காயத்துக்கு மஞ்சள், வேப்பங் கொழுந்து, குப்பை மேனி ஒன்றாக அரைத்து புண்கள் மேல் தடவி வர பாதிப்பை தவிர்க்கலாம்.

    மாடுகளுக்கு சுகவீனம் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை மருத்துவமனைகளை அணுகி கால்நடை டாக்டரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள கால்நடை விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×