search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை அமராவதி அணை 70 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    உடுமலை அமராவதி அணை 70 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • மேற்குத்தொடச்சி மலைப்பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப்பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது.
    • தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் குறைந்து போனது. இதனால் அணையில் உள்ள நீா் இருப்பை பொறுத்து கரூா் வரையில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களைக் காப்பாற்றவும் ஜூன் 29-ந் தேதி அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    இதையடுத்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்பிற்கும், குடிநீா்த் தேவைகளுக்காகவும் மீண்டும் அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆகஸ்ட் 8-ந்தேதி அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீா்மட்டம் 65 அடியாக இருந்தது. இதைத்தொடா்ந்து அணையின் நீா்மட்டம் குறைந்து போனது.

    இந்நிலையில் மேற்குத்தொடச்சி மலைப்பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப்பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 60 அடியை தாண்டியது.

    இதைத்தொடா்ந்து பயிா்களை காப்பாற்றும் பொருட்டும், குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் பொருட்டும் அக்டோபா் 13ந்தேதி அமராவதி அணையில் இருந்து மீண்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையில் நீா் இருப்பு படிப்படியாக குறைந்தது.

    தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70 அடியை எட்டியது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத்தலமான திருமூா்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×