search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று ஆடிப்பெருக்கு விழா- பவானி கூடுதுறையில் புனித நீராட குவிந்த புதுமண தம்பதிகள்

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள்

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம். இங்கு அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பெருக்கு மற்றும் முக்கிய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட த்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக திருமண தம்பதிகள் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் ஆற்றில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பலர் புது தாலி மாற்றி கொண்டனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தீயணைப்புத்துறை சார்பில் ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கோவில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இதையொட்டி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடையின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

    இதே போல் ஆடிப்பெருக்கையொட்டி ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையல் போட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு படையலில் உணவு வைத்து அதில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவு மற்றும் தின்பண்டங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர்.

    இதையடுத்து அவர்கள் படையலின் பகுதியை முன்னோர்களை நினைத்து காகத்துக்கு வைத்தனர். மற்றொரு பகுதியை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டனர். முன்னதாக அவர்கள் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    Next Story
    ×