search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கோர்ட்டில் ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
    X

    கோவை கோர்ட்டில் ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி

    • ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா, சிவகுமார் மற்றும் தனது குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    கவிதா மீது கோவை போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நடந்த திருட்டு வழக்கு ஒன்று கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக கவிதா கடந்த மாதம் 23-ந் தேதி கோர்ட்டுக்கு வந்தார்.

    கோர்ட்டில் உள்ள அறையில் அவர் அமர்ந்து இருந்தார். அங்கு அவரது கணவர் சிவக்குமாரும் வந்தார். குழந்தைகளையும், தன்னையும் தவிக்க விட்டுச் சென்றது பற்றி கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கொண்டு இருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார். இதில் கவிதாவின் உடல் முழுவதும் காயம் அடைந்து துடிதுடித்தார். உடனடியாக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மெல்ல, மெல்ல அவர் உடல்நிலை தேறி வருகிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் கவிதாவிற்கு உடலில் பல இடங்களில் ஆசிட் வீச்சு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்டிக் சர்ஜரி வசதி உள்ளதால் அவருக்கு உயர்தர சிகிச்சை இங்கேயே வழங்கப்பட்டு வருகிறது.

    உடலின் ஒரு பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது. இதில் அவர் நன்கு உடல் நலம் தேறி வருகிறார். அடுத்தக்கட்டமாக அவருக்கு மேலும் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.

    Next Story
    ×