search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அருகே சோகம்: பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்
    X

    பவானிசாகர் அருகே சோகம்: பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்

    • கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கவுரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கவுரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதற்காக அவர் மாதம் தோறும் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

    அப்போது கவுரியை உடல் பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை பிறக்கும் தேதி வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து அன்று மாலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கவுரியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கவுரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதனையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது. எனினும் குழந்தை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த ஒரு நாளே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×