search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம்- 60 பேர் கைது
    X

    தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம்- 60 பேர் கைது

    • அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் முருகன், வள்ளி மற்றும் விநாயகர் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. 9-ம் நாள் நடைபெறும் தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுப்பார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் வடம் பிடித்தால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. தேர் திருவிழா நாளில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு தேர் திருவிழா நாளான இன்று (சனிக்கிழமை) குமார கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது. என்ன நடக்குமோ? என பக்தர்கள் அச்சப்பட்டனர்.

    இந்தநிலையில் இன்று காலையில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் முருகன்-வள்ளி ஒரு தேருக்கும் விநாயகர் ஒரு தேருக்கும் எழுந்தருளினர். காலை 8-30 மணிக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அப்போது திடீரென போலீசார் பாதுகாப்பையும் மீறி இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்பட இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கோஷமிட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தேரோட்ட நாளில் நடைபெற்ற போராட்டத்தால் இன்று குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது.

    Next Story
    ×