search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் முன்பே அனுமதி வழங்கி இருந்தால் 40 உயிர்கள் பலியாகி இருக்காது- கே.பாலகிருஷ்ணன்
    X

    கவர்னர் முன்பே அனுமதி வழங்கி இருந்தால் 40 உயிர்கள் பலியாகி இருக்காது- கே.பாலகிருஷ்ணன்

    • அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.
    • தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணிக்கு அனுமதி கேட்டு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. கோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டை ஏற்க ஆர்.எஸ்.எஸ். மறுத்தது.

    அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான அனுமதி கவலை அளிக்கிறது. அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி வருந்தத்தக்க விசயம்.

    தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு கவர்னர் முதலிலேயே அனுமதி அளித்து இருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியாகி இருக்காது.

    தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.

    உலகின் அனைத்து நாடுகளும் மத அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக உண்மைக்கு மாறான பேச்சை பேசி வருகிறார். அரசியல் சட்டத்தின் விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார்.

    தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் விதமாக போட்டி அரசியல்வாதி போல் அவர் செயல்படுகிறார்.

    அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் வேதனை அளிக்கிறது. சாதாரண குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மனித உரிமை மீறல் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது சட்ட விரோத நடவடிக்கை.

    இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்படும்.

    டாஸ்மாக் கடைகளை எடுத்து நடத்தும் அரசு கனிமவள வியாபாரத்தையும் நடத்த வேண்டும். கனிமவள கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.

    மக்கள் நல பணியாளர்கள் பணியை ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது ரத்து செய்தார்கள். ஒரு அரசு ஒரு திட்டத்தை வகுக்கும்போது, மற்றொரு ஆட்சி அமையும்போது அதில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்ய வேண்டுமே தவிர ரத்து செய்யக்கூடாது.

    தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பாளை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாவட்ட குழு நிர்வாகிகள் குழந்தை வேலு, நாராயணன், முருகன், பழனி, மாநில குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், கற்பகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×