search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தாய்- ஆத்திரத்தில் வெறிச்செயல்
    X

    பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தாய்- ஆத்திரத்தில் வெறிச்செயல்

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார்.
    • அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜீவிதா இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார். அதன் பின்னர் சல்லக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த ஜீவிதாவுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    கடந்த 2 வாரங்களாக கணவர் சிவராஜ் குழந்தையை பார்க்க வராமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் குழந்தைக்கு கழுத்து பகுதியில் வேனல் கட்டிகள் இருந்து வந்ததால் தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. ஜீவிதாவிடம் குழந்தை தாய்ப்பால் குடிக்காமலும் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவிதா தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார்.

    இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை துடித்தது. தொட்டிலில் படுத்திருந்த நிலையிலேயே குழந்தையின் கழுத்தை வெட்டியதால் தொட்டில் வேட்டியும் ரத்தமானது. ஆனால் ஜீவிதாவோ, இதனை மறைத்து குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் பீறிட்டு வருவதாக கூறி உள்ளார்.

    இதையடுத்து அவரது அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

    இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்து கட்டி பெரிதாகி அதன் மூலமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜீவிதா முதலில் தெரிவித்தார். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஜீவிதா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இது தொடர்பாக தாய் ஜீவிதா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    8 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்த நிலையிலும் 2 வாரங்களாக கணவர் பார்க்க வரவில்லை. குழந்தையும் தாய்ப்பால் குடிக்காமல் இருந்தது. இதனால் புட்டிப்பால் மட்டுமே கொடுத்து வந்தேன். இதன் காரணமாக எனக்கு மன அழுத்தம் அதிகமானது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த நான் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    இவ்வாறு ஜீவிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    Next Story
    ×