search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 3வது நாளாக குளிக்க தடை

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    பென்னாகரம்:

    கர்நாடக மாநிலம், மைசூர், மாண்டியா, கொடுகு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

    இந்த மழை வெள்ளம் காவிரி ஆற்றில் கலந்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்தது. இதனால் காரணமாக இன்று 3வது நாளாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தபடி பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஐந்தருவி தெரியாதபடி தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டபடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×