search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது
    X
    துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது

    2 பெண்களுடன் குடும்பம் நடத்திய சேலம் இன்ஸ்பெக்டர்- துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது

    பெண்கள் விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டரின் செயல்கள் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் மாநகர வெடிகுண்டு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமொழி. இவர் மீது கடந்த 1-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அடுத்த ஆலிப்பச்சேரி வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த முத்துமாரி (வயது 39) என்பவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் இன்ஸ்பெக்டர் தன்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து தன்னை அடித்து விரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடா தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து உதவி கமி‌ஷனர் அசோகன் மற்றும் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மணிமொழியனின் மனைவி கடந்த 2015-ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி இறந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு மணிமொழி தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது கணவரை பிரிந்து தனது மகன், மகளுடன் வசித்து வந்த முத்துமாரி பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் மணிமொழியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் மணிமொழியின் வீட்டுக்கே வந்து முத்துமாரி தங்கி செல்வது வழக்கமாகியது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்பெக்டர் மணிமொழி சேலம் மாநகர வெடிகுண்டு பிரிவு இன்ஸ்பெக்டராக மாறுதல் செய்யப்பட்டார்.

    இவர் சேலம் லைன் மேடு காவலர் குடியிருப்பில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். அதைத்தொடர்ந்து முத்துமாரி அடிக்கடி சேலத்திற்கு வந்து மணி மொழியுடன் 4 நாட்கள் தங்கிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம்போல் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி அவர் சேலத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் மணிமொழியுடன் காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

    இதனிடையே இன்ஸ்பெக்டர் மணிமொழி தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது தனக்கு வீட்டு வேலை, சமையல் வேலை செய்த கணவனை இழந்த மாலதி என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். அவருடனும் மணிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் டிசம்பர் மாதம் 31-ந் தேதி மணிமொழியை பார்க்க மாலதி வந்தார். அப்போது மணிமொழியுடன் வீட்டில் முத்துமாரி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிமொழி மாலதியுடன் சேர்ந்து முத்துமாரியையும் அவரது மகளையும் வீட்டில் இருந்து வெளியேறும்படி கூறி தாக்கி விரட்டியதாக தெரிகிறது. இந்த தகவல் விசாரணையில் தெரியவந்தது.

    இதுபற்றி உதவி கமி‌ஷனர் அசோகன், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் விசாரணை அறிக்கையை போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடாவிற்கு அனுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து இன்று இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    விசாரணை முடிவில் இன்ஸ்பெக்டர் மணிமொழி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. பெண்கள் விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டரின் செயல்கள் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    Next Story
    ×