search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயகுமார், பறிமுதல் செய்யப்பட்ட போலி அடையாள அட்டை
    X
    உதயகுமார், பறிமுதல் செய்யப்பட்ட போலி அடையாள அட்டை

    10-ம் வகுப்பு படித்து ரூ.8 லட்சம் மோசடி செய்த பலே திருடன் கைது

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றிய திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    வேலூரில் உள்ள உணவகம் ஒன்றில் மாவு பிசையும் வேலை செய்து வந்தார். பண ஆசை அவரை திருடனாக மாற்றியது. 2017-ம் ஆண்டு முதல் வேலூர் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்தார் இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்‌.

    வேலூர் போலீஸ் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு 11 மாதங்கள் சிறையில் இருந்தார்.

    அப்போதும் வெளியே வந்தவர் திருந்தி வாழாமல், திருட்டு தொழில் செய்தால் மாட்டிக்கொள்கிறோம் என்பதை உணர்ந்து திருட்டை தவிர்த்து மாற்று வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுத்தார்.

    இதற்காக அவர் தேர்ந்தெடுத்த பாதை தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்.

    இதற்காக வேலூர் மத்திய ஜெயிலில் வேலை செய்து வருவது போன்ற ஒரு போலியான காவலர் அடையாள அட்டை தயார் செய்தார்.

    அதை மற்றவர்களிடம் காட்டி சிறை துறை, காவல் துறை, பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்தார்.

    அவரிடம் ஏமாந்த கணியம்பாடி பகுதியை சேர்ந்த அரவிந்த், பிரம்பபுரத்தை சேர்ந்த சாந்தகுமார், விஷ்ணுகுமார், மணிகண்டன் ஆகிய பட்டதாரி இளைஞர்கள் மோசடி பேர்வழி உதயகுமிரிடம் பணம் கொடுத்து ஏமாந்து புகார் அளித்தனர்.

    பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பெண்களிடம் "நீங்கள் 20 பேர் கொண்ட மகளிர் குழுவை உருவாக்குங்கள், அதில் தலா 2800 ரூபாய் கொடுத்தால் 85 ஆயிரமும், 5000 கொடுத்தால் ரூ.1 லட்சம் வரை லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.

    மகளிர் குழு பெண்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யவே "இந்தாங்க சப்-கலெக்டர் நம்பர் நீங்களே போன் பண்ணி கேளுங்க" என ஒரு நம்பரை கொடுத்துள்ளார்.

    அந்த எண்ணுக்கு பெண்கள் போன் செய்த போது உதயகுமாரே சப் கலெக்டர் போல மிமிக்ரி செய்து பேசியுள்ளார். இதனை அறிந்த பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இது போன்ற மோசடி செயலை செய்யும் உதயகுமார் ஏமாற்ற இருப்பவர்களை நம்ப வைக்க ஒரு பாண்டு பத்திரத்தில் எழுதி கையெழுத்தும் போட்டுக்கொடுத்துள்ளார். இது போல மொத்தம் ரூ.8 லட்சத்து 33,800 வரை ஏமாற்றியுள்ளார்.

    இதுகுறித்து இதுரை 7 புகார்கள் வந்த நிலையில், வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதயகுமாரை நேற்று கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் போலி போலீஸ் ஐடி கார்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×