search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலூர் ஜெயிலில் இருந்து நளினி வெளியே வந்த காட்சி.
    X
    வேலூர் ஜெயிலில் இருந்து நளினி வெளியே வந்த காட்சி.

    வேலூர் ஜெயிலில் இருந்து நளினி பரோலில் வெளியே வந்தார்

    வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து நளினி இன்று காலை பரோலில் வெளியே வந்தார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நளினியின் தாயார் பத்மா கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அப்போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அவர் வேலூரிலேயே தங்கி இருக்க உத்தரவிடப்பட்டது. காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள வேலு என்பவரது வீட்டில் தங்க நளினி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கினர்.

    இன்று முதல் 30 நாட்கள் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. அதற்கான ஆணை வேலூர் ஜெயில் அதிகாரிகளுக்கு வந்தடைந்தது.

    இதனை தொடர்ந்து வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து நளினி இன்று காலை 10 மணிக்கு பரோலில் வெளியே வந்தார். அவரது கையில் 2 பைகள் வைத்திருந்தார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நளினியை காட்பாடி பிரம்மபுரம் காலனியில் உள்ள வேலு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    வீட்டு வாசலில் நளினியின் தாயார் பத்மா, அவரது தம்பி மனைவி மற்றும் முருகனின் உறவினர் தேன்மொழி ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இவர்கள் 3 பேரும் நளினியுடன் தங்கியுள்ளனர்.

    நளினி வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. மேலும் வெளிநபர்கள், அரசியல் கட்சியினரை வந்து அவரை சந்திக்க கூடாது. மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லலாம். அதற்கும் முன் அனுமதி பெற வேண்டும்.

    பத்திரிகை ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது.

    தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    நளினி தங்கியுள்ள வீட்டில் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் துப்பாக்கி ஏந்திய 50 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




    Next Story
    ×