search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷோபனா
    X
    ஷோபனா

    ஓசூர் பொதுப்பணித்துறை பெண் அதிகாரியின் 11 வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு

    பெண் அதிகாரி ஷோபனா உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்து உள்ளாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா (வயது 57). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது குடியிருப்பு மற்றும் கார்களில் சோதனை நடத்தினர்.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரின் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் நகை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 11 வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக வங்கி மேலாளர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    மேலும் ஷோபனா பயன்படுத்திய வங்கி லாக்கரை திறந்து பார்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவை தவிர அவர், உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்து உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×