search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2-ல் சாய்ந்து விழுந்த மண்கொட்டும் எந்திரத்தை படத்தில் காணலாம்.
    X
    நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2-ல் சாய்ந்து விழுந்த மண்கொட்டும் எந்திரத்தை படத்தில் காணலாம்.

    நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு: சாய்ந்து விழுந்த ராட்சத எந்திரம்

    நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் மண் சரிந்ததில் ராட்சத எந்திரம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
    கடலூர் :

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள 3 சுரங்கங்களில் இருந்து வெட்டப்படும் நிலக்கரியை கொண்டு, அனல்மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் தேவைக்கு போக நிலக்கரியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மேல் மண் எடுக்கவும், அந்த பணியின் போது சேகரிக்கப்படும் மண்ணை ஏற்கனவே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு நிரப்பவும் சுரங்கப்பகுதியில் ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று 2-வது சுரங்கத்தில் முதற்கட்ட பணியின் போது நிலக்கரி வெட்டும் பணி நடைபெற்றது. இதில் சுரங்க மண்ணை ராட்சத எந்திரத்தின் மூலம் ஏற்கனவே நிலக்கரி வெட்டப்பட்ட இடங்களில் கொட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மண் கொட்டும் ராட்சத எந்திரம் ஒரு பகுதியில் சரிந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் சுரங்க பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    சரிந்து விழுந்த மண் வெட்டும் எந்திரத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தவிபத்து காரணமாக, சுரங்கப்பகுதியில் நிலக்கரி வெட்டும் பணி பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும், எந்திரத்தில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து இழப்பீடு எவ்வளவு இருக்கும், விபத்துக்கான காரணம் என்ன? மற்றும் பாதிப்புகள் குறித்து என்.எல்.சி.யின் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாக தரப்பில் கேட்ட போது, தற்போது விபத்துக்குள்ளான எந்திரம் சுமார் 2 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். எந்திரம் இருந்த பகுதியின் அடியில் திடீரென மண் சரிந்ததால் இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதனால் ஒரு மணிநேரம் அந்த பகுதியில் நிலக்கரி வெட்டும் பணி பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் மூலம் வழக்கம் போல் பணிகள் நடந்தது.

    தொடர்ந்து விபத்துக்குள்ளான எந்திரத்தை சீரமைத்து, எதிர்காலத்தில் விபத்துகள் நடக்காத வகையில் சரியான திட்டமிடலுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×