என் மலர்
செய்திகள்

விருதுநகரில் புதிய பஸ் நிலையத்தை வேலி போட்டு அடைக்கப்போவதாக மூதாட்டி எச்சரிக்கை
விருதுநகர்:
மதுரை சண்முகா நகரைச் சேர்ந்தவர் உமாதேவி (வயது71). இவர் விருதுநகர் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், விருதுநகர் ராமமூர்த்தி ரோடு பகுதியில் நாங்கள் முன்பு வசித்து வந்தோம்.
1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விருதுநகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எங்களுக்கு சொந்தமான இடத்தை மாற்று இடம் தருவதாக கூறி நகராட்சி நிர்வாகம் கேட்டது.
விருதுநகரில் உள்ள பழைய குப்பை கிடங்கு பகுதியில் இடம் தருவதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி எங்களுக்கு சொந்தமான இடத்தை புதிய பஸ் நிலையம் அமைக்க வழங்கினோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை எங்களுக்கு மாற்று இடம் தரவில்லை.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு எனது கணவர் பாலசுப்பிரமணியம் இறந்து விட்டார். தற்போது எனக்கும் 71 வயதாகி விட்டது. 31 ஆண்டுகளாக மாற்று இடம் தராமல் நகராட்சி நிர்வாகம் இழுத் தடித்து வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் மாற்று இடம் வழங்காதபட்சத்தில் எங்களுக்கு சொந்தமான இடத்தை (புதிய பஸ் நிலையம்) வேலி அமைத்து அடைத்து விடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாற்று இடம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிய பஸ் நிலையத்தில் தற்போதையை நிலமதிப்பு குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






