search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணேசா
    X
    கணேசா

    வேலூர், பெங்களூரில் ஆவின் பொதுமேலாளர் வீட்டில் அதிரடி சோதனை

    வேலூர், பெங்களூரில் ஆவின் பொதுமேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் ஆவின் மேலாளர் ரவி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மினி வேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56 ) கூறியதன் பேரில் லஞ்சப்பணம் கேட்டதாக ரவி தெரிவித்தார்.

    பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப்பிறகு காசோலை வழங்குவதற்காக தொடர்ந்து கணேசா ரூ.50 ஆயிரம் வசூலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார். அதன் பெயரிலேயே ரவி லஞ்சம் கேட்டுள்ளார்.

    இந்த தகவலை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஆவின் பொது மேலாளராக பணியாற்றி வரும் கணேசாவை கைது செய்தனர்.

    விசாரணையில் பொது மேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவருக்கும் லஞ்சம் தொடர்பு இருப்பது உறுதியானது. பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர் ஆவினில் கணேசா நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் அதிக லஞ்சப் பணம் வசூல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    இதனால் அவருடைய சொத்து விவரங்களையும், வங்கி கணக்கு போன்றவற்றையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

    பொது மேலாளர் கணேசா வேலூர் சத்துவாச்சாரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டில் டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தாவங்கிரியில் உள்ள ஆவின் பொது மேலாளர் கணேசாவின் சொந்த வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் சோதனை நடைபெற்றது.

    நேற்று மாலை முதல் விடிய விடிய இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில்:-

    ஆவின் பொதுமேலாளர் கணேசா வாடகைக்கு தங்கியிருந்த சத்துவாச்சாரி வீடு மற்றும் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    அங்கிருந்த நகை, பணம் போன்றவற்றுக்கு போதுமான கணக்கு உள்ளது. அவரது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்.
    Next Story
    ×