என் மலர்
செய்திகள்

பட்டாசுகள்
புதுவையில் 40 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனை
புதுவையில் கொரோனா பரவல் தடுப்பால் பொருளாதார இழப்பு, பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு 40 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையின் உச்சபட்ச மகிழ்ச்சி புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது தான்.
புதுவையை பொறுத்தவரை தீபாவளிக்கு 10 நாட்கள் முன்னதாகவே பட்டாசு கடைகள் அமைக்கப்படும். தனியார் மட்டுமல்லாது அரசின் சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி, வானவில் உள்ளிட்ட நிறுவனங்களும் பட்டாசு விற்பனையில் களமிறங்கும்.
சமீப ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் பட்டாசு கடைகள் அமைப்பதில்லை. இந்த ஆண்டும் அதே நிலைதான் நீடித்தது.
அதோடு, புதுவையில் பட்டாசு கடை அமைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் வழக்கமாக திறக்கும் தனியார் கடைகளில் 25 சதவீதம் கடைகள் திறக்கப்படவில்லை. கடைகளின் எண்ணிக்கை குறைந்த போதும் பட்டாசு விற்பனை அதிகரிக்கவில்லை.
கொரோனா பரவுதலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களிடம் பணபுழக்கம் குறைந்திருந்தது. இதுவும் பட்டாசு விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
வழக்கமாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தொடங்கி புதுவை நகரம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க தொடங்கும். இந்த சத்தம் தீபாவளிக்கு முந்தைய நாள் காலையில் தொடங்கி மறுநாள் வரை இடைவிடாது நகரபகுதியில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு பட்டாசு வெடிக்கும் சத்தம் வெகுவாக குறைந்திருந்தது. நகரபகுதியில் தீபாவளி நாளான நேற்றைய தினம் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு சத்தம் கேட்டது.
கடந்த ஆண்டை விட மிக குறைவாகவே பட்டாசு விற்பனையாகி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பால் பொருளாதார இழப்பு, பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு போன்ற காரணங்களாலும் இந்த ஆண்டு 40 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.
இதனால், கடைகளில் விற்பனையாகாத மீதமுள்ள பட்டாசுகள் தேங்கியுள்ளது. இது திரும்ப எடுத்து கொள்ளப்படாது என்பதால் பட்டாசை அடுத்த ஆண்டு வரை பாதுகாப்பது மிகப்பெரிய சிரமம் என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
Next Story






