search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட படகுகள்
    X
    டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட படகுகள்

    ஊட்டி படகு இல்லத்துக்கு டிராகன், வாத்து, மயில் வடிவங்களில் புதிதாக 50 படகுகள்

    சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி படகு இல்லத்துக்கு டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களில் புதிதாக 50 படகுகள் வரவழைக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. ஊட்டி, பைக்காரா படகு இல்லங்களில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். ஊரடங்கு உத்தரவால் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டதால் 6 மாதங்களுக்கும் மேலாக படகு இல்லங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் படகுகள் நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து வருகின்றன. சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஊட்டியில் பூங்காக்கள் திறக்கப்பட்டதை போல் படகு இல்லங்களும் திறக்கப்படுமா என்று வியாபாரிகள், தொழிலாளர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்கிடையே படகு இல்லத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஊட்டி படகு இல்லத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே செல்வதால் சுற்றுலா பயணிகளை கவர புதிய வடிவிலான படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் வடிவமைக்கப்பட்ட 2 துடுப்பு படகுகள், 7 மிதி படகுகள் என 9 படகுகள் ஊட்டி படகு இல்லத்துக்கு முதல் கட்டமாக எடுத்து வரப்பட்டன. டிராகன், வாத்து, மயில், தவளை போன்ற உருவங்களை தத்ரூபமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட படகுகள் வந்து உள்ளது. இன்னும் புதிய படகுகள் வரவழைக்கப்பட இருக்கிறது.

    படகு இல்லத்தில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் பல வகையான செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர பூந்தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. படகு சவாரியின் போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து மேல்நோக்கி சுற்றிலும் தெளிக்கிறது. படகு இல்லத்தை மேம்படுத்தும் மற்றும் பொலிவுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் பைக்காரா படகு இல்லத்துக்கு புதிய படகுகள் வரவழைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேஷ் கூறும்போது, ஊட்டி படகு இல்லத்துக்கு புதிதாக 50 படகுகள் வரவழைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 9 படகுகள் வந்து உள்ளன. அதேபோல் பைக்காரா படகு இல்லத்துக்கும் புதிதாக 6 படகுகள் கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
    Next Story
    ×