search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்வின் ஜெயக்குமார்
    X
    எட்வின் ஜெயக்குமார்

    பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் மனைவி மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது- கைதான வங்கி காசாளர் வாக்குமூலம்

    பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் மனைவி மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டதாக வாடிக்கையாளர்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைதான வங்கி காசாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (வயது 35). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்த இவருக்கும், தஞ்சை மாவட்டம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணமான நாளில் இருந்தே எட்வின் ஜெயக்குமார், தன் மனைவியுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். தொடர்ந்து அவர் செல்போனிலேயே மணிக்கணக்காக மூழ்கி கிடந்ததோடு, மனைவி தாட்சர் குடும்பத்தாரிடம் 50 பவுன் நகை கேட்டு துன்புறுத்தியும் வந்துள்ளார்.

    கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தாட்சர், அவரது பீரோவை சோதனை நடத்தியதில் 10 செல்போன்கள், லேப்டாப் சிக்கின. அதில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100 ஆபாச வீடியோ இருந்தது.

    இதுதொடர்பாக தாட்சர், அப்போதைய தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் எட்வின் ஜெயக்குமார், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தன் வலையில் வீழ்த்தி அவர்களுடன் தவறாக நடந்து கொண்டதும், அதை வீடியோவாக எடுத்து வைத்து ரசித்து வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து தஞ்சை போலீசார் எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த வழக்கு தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இருந்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையில் மதுரை ஐகோர்ட்டில் எட்வின் ஜெயக்குமார் ஜாமீன் பெற்றுக் கொண்டு குடும்பத்தோடு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி எட்வின் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    வங்கிக்கு வந்த பெண் வாடிக்கையாளர்களை மயக்கியது எப்படி? எத்தனை பேரை மயக்கி ஆபாசமாக படம், வீடியோ எடுத்தார். ஆபாச படங்கள் ஏற்றிய லேப்டாப் மற்றும் சி.டி. ஹார்டு டிஸ்க் போன்றவற்றை எங்கு பதுக்கி வைத்துள்ளார். அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டாரா? அல்லது கணினி, லேப்டாப்பில் பதிவேற்றி அவர் மட்டும் ரசித்தாரா? என எட்வின் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணையில் பெண்களை மயக்கியது குறித்து எட்வின் ஜெயக்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்ஜினீயரிங் படிப்பு முடித்த நான், வங்கித் தேர்வு எழுதி கடந்த 2014-ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2016-ம் ஆண்டு பணிமாறுதல் ஆகி புதுக்கோட்டைக்கு வந்தேன். எனக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி தாட்சரிடம் கூறினேன்.

    மேலும், திருமணத்திற்கு முன்னர் எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் உல்லாசமாக இருந்ததை எனது செல்போனில் பதிவு செய்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்தேன். இதனால், மனைவி மீது எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தேன்.

    எனக்கு வரும் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) மற்றும் வீடியோக்களை எனது மனைவி பார்த்து விட்டார். மேலும் நான் வங்கியில் வேலை பார்க்கும் சக ஊழியர்களையும், வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து எனது செல்போனில் வைத்திருந்தேன்.

    மேலும், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பாஸ்புக் மற்றும் பணபரிவர்த்தனைகளையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தேன். திருமணத்திற்கு முன்பாக பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எனது செல்போன்களில் இருந்ததை எனது மனைவி பார்த்து விட்டு இதுபற்றி என்னிடம் கேட்டு பிரச்சினை செய்தார்.

    இதனால் கைகலப்பு ஏற்பட்டு நான் எனது மனைவியை அடித்தேன். இதுபற்றி எனது அம்மாவிடம் எனது மனைவி கூறியபோது என் அம்மாவும் தாட்சரையே திட்டினார். அதன்பிறகு என் மனைவி குளிக்கும் போது நான் அவருக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னிடம் பிரச்சனை செய்தால் நான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டினேன். இதையடுத்து என் மனைவி அவர் ஊருக்கு சென்று புகார் அளித்து விட்டார்.

    இதனால், நான் திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    எட்வின் ஜெயக்குமார் வாக்குமூலத்தால் அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை. புகார் கொடுக்கும் பட்சத்தில் எட்வின் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×