search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களரம்பட்டியில் தண்டோரா போட்டு பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்ட போது எடுத்த படம்.
    X
    களரம்பட்டியில் தண்டோரா போட்டு பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்ட போது எடுத்த படம்.

    பிரதமர் நிதி உதவி திட்டத்தில் மோசடி- பணத்தை திரும்ப செலுத்த தண்டோரா மூலம் அறிவுறுத்தல்

    பிரதமர் நிதி உதவி திட்டத்தில் மோசடி தொடர்பாக பணத்தை திரும்ப செலுத்த தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
    பெத்தநாயக்கன்பாளையம்:

    தமிழகம் முழுவதும் பிரதமர் நிதி உதவி திட்டத்தின் கீழ் போலியான கணக்குகளை கணினி மூலம் இணைத்து ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற போர்வையில் நிதி உதவி பெற்று உள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அரசு பணத்தை திரும்ப பெற்று வருகிறது.

    பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் தவறாக தங்களை விவசாயிகள் என பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பணத்தை திரும்ப செலுத்த தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி வங்கி கணக்கில் பணம் பெற்றவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் எனவும், அப்படி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் அவர்களுக்கு கிடைக்க பெறும் அனைத்து அரசு சலுகைகளும் நிறுத்தி வைக்கப்படும் என தண்டோரா மூலம் கிராமம், கிராமமாக தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தாசில்தார் வெங்கடேசன் கூறும் போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் பிரதமரின் நிதி உதவி பெறும் திட்டத்தில் விவசாயிகள் என்று 947 பேர் பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். இதில் 347 பேர் மட்டும் உண்மையான விவசாயிகள் என்பது தெரியவந்தது. 600 பேர் போலியான விவசாயிகள் ஆவர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.8 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. 36 கிராம ஊராட்சிகளிலும் முறைகேடாக பணம் பெற்றவர்கள் பட்டியல் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதே போல கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் பிரதமரின் நிதி உதவி நிதி திட்டத்தின் கீழ் மோசடி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது. அதாவது மோசடி செய்து பணம் பெற்றவர்கள், அதனை திரும்ப செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையில் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்டோரா போடப்பட்டது.

    மேலும் தாரமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று தண்டோரா மூலம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×